» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்: தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!

செவ்வாய் 18, நவம்பர் 2025 11:24:55 AM (IST)

இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை நோக்கி நகர்வதால் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: சென்னையில் சூரியஒளி தென்பட்டாலும், வரும் நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. சென்னைக்கு வடக்கேயும் தெற்கேயும் மழை பெய்து வருகிறது. மழை மேகங்கள் சென்னையை சுற்றுவளைத்து விட்டன. இன்று(நவ. 18) 20 மி.மீ. முதல் 40 மி.மீ வரை மழைக்கு வாய்ப்புள்ளது. ஒரே இரவில் சென்னையில் மிதமான மழை பெய்தது.

இன்றிரவு முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகருகிறது. நேற்றிரவு டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறையில் நல்ல மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மாஞ்சோலை வனப்பகுதி கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. குமரிக் கடல் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடல் நோக்கி நகர்ந்தவுடன், 5 நாள்களுக்குப் பிறகு, தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory