» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)



கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர்.

தென்பழனி' என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரைக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மார்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இரவு நேரங்களில் அந்தந்த சமுதாயங்கள் சார்பில் மண்டகப்படி திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு சுவாமிக்குச் சிறப்பு வழிபாடும் தீபாராதனையும் காட்டப்பட்டது.

காலை 8 மணியளவில் அலங்கரிக்கப்பட்டத் தேரில் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளினார். காலை 10.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவர் சுப்பிரமணியன், திமுக நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், வார்டு கவுன்சிலர் ஜெயக்கொடி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் திரளான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டபடி வடம் பிடித்துத் தேரை இழுத்தனர்.

தெற்கு ரதவீதியில் இருந்து புறப்பட்டத் தேரானது, காவல் நிலைய சாலை, அரண்மனை வாசல் தெரு, கீழ்பஜார் வழியாக நிலையை வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கு மீண்டும் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்குக் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.

கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவின் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) இரவு 7 மணியளவில் கோவில் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory