» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 12, ஜூன் 2026 12:09:08 PM (IST)

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்யக் கோரிய பொதுநல வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: "தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு, தேசிய கீதத்துடன் நிறைவு செய்யப்படுவது பல ஆண்டுகளாக மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அண்மைக்காலமாகச் சில அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது."

"அரசு நிகழ்ச்சிகளை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், மாநிலப் பாடலைப் பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க எந்தத் தடையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல; அது தமிழர்களின் உணர்வு, கலாசாரம் மற்றும் அடையாளமாகத் திகழ்கிறது.

எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இத்தகைய கலாசார மோதல்களைத் தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்குத் தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்," என மனுதாரர் கோரியிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory