» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!

வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்ததைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட 38 பேர் அடங்கிய கள ஆய்வு சட்டமன்றக் குழுவின் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் தோல்விக்கு திமுக தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, விரிவான விசாரணைக்காக 38 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை நியமித்தார். இக்குழுவினர் தொகுதி வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தனித்தனியாகக் கருத்துகளைக் கேட்டறிந்தனர். இந்தத் தகவல்கள் அறிக்கையாகத் தயார் செய்யப்பட்டு, கடந்த ஜூன் 10-ஆம் தேதி மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்கள்

அமைச்சர்களின் மெத்தனப் போக்கு: பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலமுறை காத்திருந்தும் அமைச்சர்களைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதே மக்களின் பெரும் வேதனைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

உதவியாளர்களின் முட்டுக்கட்டை: மக்கள் மற்றும் உடன்பிறப்புகளின் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல, அவர்களின் உதவியாளர்களே (PA) பெரும் முட்டுக்கட்டையாக இருந்து செயல்பட்டுள்ளனர்.

அதிகாரிகளின் ஆதிக்கம்: உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கோரிய திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. மக்கள் தேவைகளை விடுத்து, அதிகாரிகளே தன்னிச்சையாகத் திட்டங்களை முடிவு செய்துள்ளனர்.

அரசு - கட்சி இடைவெளி: தேர்தல் களத்தில் திமுக அரசு வேறு, திமுக கட்சி வேறு என இரண்டு துருவங்களாகப் பிரிந்து நின்றது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அதிருப்தி

தேர்தல்கள் நடத்தப்படாதது: கூட்டுறவுச் சங்கம் மற்றும் ஆவின் உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தேர்தல்கள் நடத்தப்படாததால் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் தாமதம்: ஓராண்டுக்கும் மேலாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளைச் சரிவரச் செய்ய முடியாமல் போனது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புறக்கணிக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள்: கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத மூத்த நிர்வாகிகளை மாவட்டத் தலைமை கண்டுகொள்ளாமல் முழுமையாகப் புறக்கணித்துள்ளது.

டெண்டர் விவகாரம்: அரசு ஒப்பந்தங்கள் (Tenders) பெரும்பாலான இடங்களில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கோ அல்லது உண்மையான திமுகவினருக்கோ ஒதுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இளைஞரணி முடக்கம்: கட்சியில் உள்ள இளைஞர்களின் ஆற்றலையும் சக்தியையும் தேர்தல் களத்தில் முழுமையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.

சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை மீதான குற்றச்சாட்டுகள்

அறங்காவலர் குழு நியமனங்கள்: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் அறங்காவலர் குழு நியமனப் பொறுப்புகளில், உண்மையான உழைத்த திமுகவினருக்குப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

நெருக்கமானவர்களுக்கு முன்னுரிமை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு வந்தவர்களுக்கும், அமைச்சர் சேகர்பாபுவுக்கு வேண்டியவர்களுக்கும் மட்டுமே முக்கியப் பொறுப்புகள் வாரி வழங்கப்பட்டதாகக் கள ஆய்வில் புகார்கள் குவிந்துள்ளன. தற்காலிக நியமனப் பொறுப்புகளிலும் கட்சியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

திட்ட குறைபாடுகள் மற்றும் விஜய்யின் செல்வாக்கு

மகளிர் உரிமைத்தொகை ஏமாற்றம்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதியான அனைத்துப் பெண்களுக்கும் போதுமான எண்ணிக்கையில் போய்ச் சேரவில்லை. விடுபட்ட பெண்களிடம் இது அரசு மீதான அவநம்பிக்கையை விதைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம்: பெண் வாக்காளர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் நடிகர் விஜய்க்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைக் கீழ்மட்டத் தொண்டர்கள் முன்கூட்டியே எடுத்துக்கூறியும், மாவட்டப் பொறுப்பாளர்கள் அதனை அலட்சியப்படுத்தித் கோட்டை விட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory