» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

புதன் 27, மே 2026 5:15:56 PM (IST)



தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றடைந்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, டெல்லி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் கௌரவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் பின்னர், டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'சேவா தீர்த்' அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்குப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழகத்தின் முக்கியத் திட்டங்களுக்கான கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார். இந்தச் சந்திப்பில், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மத்திய அரசின் விசேட நிதி ஒதுக்கீடு குறித்துப் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிக்கிம் சென்றுள்ளதால், அவர் நாளை (மே 28) டெல்லி திரும்பியவுடன் முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறக் கூடும் என்று தெரிகிறது. இந்த டெல்லிப் பயணத்தின் போது, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் தனித்தனியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

மத்திய ஆளுங்கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory