» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீரன் அழகுமுத்துக் கோன் பிறந்த நாள் விழா : ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!

செவ்வாய் 11, ஜூலை 2023 12:15:16 PM (IST)



கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் 313வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தெரிவித்ததாவது: சுதந்திரப்போராட்ட தியாகிகளை, வீரர்களை உருவாக்கிய மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம். சுதந்திர போராட்ட வரலாற்றில் தூத்துக்குடி மண்ணிற்கு முக்கிய பங்கு உள்ளது. 

சுதந்திரப் போராட்ட வீரத்திலகமாய் விளங்கும் வீரன் அழகுமுத்துக்கோன் 1710ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கோவில்பட்டி அருகேயுள்ள கட்டாலங்குளத்தில் தந்தை முத்துக்கோன் தாயார் பாக்கியத்தாய் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் மற்றும் அவரது முன்னோர்களும், பின் சந்ததியினரும் எட்டயபுர மன்னரிடத்தில் தலைமைத் தளபதி பொறுப்பில் பரம்பரை பரம்பரையாக பதவி வகித்து வந்திருக்கிறார்கள். 

1759ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியிருடனான போருக்குப்பின் அழகுமுத்துக்கோன் அவர்களும் அவரது துணைத்தளபதிகள் 6 பேரும் பீரங்கி முனையில் கட்டி வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வீரன் அழகு முத்துக்கோன் 1710 முதல் 1759ஆம் ஆண்டுவரை 49 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதில் வீரன் அழகுமுத்துக்கோன் முக்கிய பங்கு வகித்தார் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.
 
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜெயா, நகராட்சி தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், கயத்தார் வட்டாட்சியர் நாகராஜன், கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், கட்டாலங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் டி.ஜேபிஆர்.தம்பா, வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் வாரிசுதாரர்கள் மீனாட்சி, ராஜேஸ்வரி, ராணி, வனஜா மற்றும் வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்க தலைவர் மாரிச்சாமி, உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் ஆய்வு

வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கட்டாலங்குளம் பகுதியில் உள்ள அவரது மணிமண்டபம் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 1450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.


மக்கள் கருத்து

NallaJul 11, 2023 - 01:02:41 PM | Posted IP 162.1*****

தலைவர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory