» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் உலக குருதி கொடையாளர் தினம்: ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு

சனி 14, ஜூன் 2025 3:53:17 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்த ரத்தக் கொடையாளர்களை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கௌரவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் இன்று (14.06.2025) உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு (World Blood Donors Day) ரத்த தானம் செய்த ரத்தக் கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் முன்னிலையில் பாரட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

உலக குருதி கொடையாளர் தினம் (World Blood Donors Day) ஒவ்வொரு வருடமும் குருதியேற்று மருத்துவத்தின் தந்தை கார்ல் லான்ஸ்டனர் (Carl Landstainer) அவர்களின் பிறந்த நாளான ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகமாக இரத்த தானம் செய்த இரத்தக் கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2024 ம் ஆண்டில் மட்டும் 11,039 யுனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு, ஏறக்குறைய 23,352 இரத்தக்கூறுகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் ஏழை எளிய மக்களுக்கு அளிக்கப்பட்டது. 2024 ம் ஆண்டில் 74 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மூலம் மட்டும் 250 யுனிட் இரத்தம் பெறப்பட்டுள்ளது. 

இங்கே பெறப்படும் இரத்த கூறுகள் கர்ப்பிணிப் பெண்களின் ரத்த சோகை சிகிச்சைக்கும், விபத்தினால் காயம்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்கும், புற்றுநோயால் அவதிபடும் நோயாளிகளின் சிகிச்சைக்கும், எலும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் பெரிதும் பயன்படுகிறது.

மேலும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ மாணவிகளுக்கு பாரட்டு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான பாதம் காப்போம் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் தங்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் நோயினை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து அதனை எளிதாக கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

 மேலும் சமுதாய அளவில் புற்று நோய் கண்டறியும் திட்டத்தின் மூலம் உங்கள் இல்லத்திற்கு சுகாதார பணியாளர்கள் நல்வாழ்விற்கான அழைப்பிதழை வழங்க உள்ளார்கள். அதனை பொதுமக்கள் அனைவரும் ஏற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

இன்று 110 முறை இரத்ததானம் வழங்கிய முரளி அவர்களையும், 108 முறை இரத்ததானம் வழங்கிய தங்கமலை காளியப்பன் , உட்பட 110 தன்னார்வலர் இரத்த கொடையாளர்களுக்கும், இரத்த தானம் வழங்கிய 140 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் சுரேஸ் துரை, கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் இரத்தின குமார், ஆறுமுகம், சரவணன், ரவிசங்கர் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், கொடையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory