» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
திங்கள் 4, டிசம்பர் 2023 8:34:30 AM (IST)
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 115 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் கடனாநதி-22, ராமநதி-32, கருப்பாநதி-50, குண்டாறு-75, அடவிநயினார்-42, ஆய்க்குடி-63, செங்கோட்டை-80, சிவகிரி-17 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
இந்த தடை நேற்றும் நீடித்தது. தற்போது சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வருவதால் அவர்கள் நேற்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அருவிகளில் நீர்வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.