» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நீர்நிலைகளில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் : பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!
திங்கள் 4, டிசம்பர் 2023 10:10:36 AM (IST)
நீர்நிலைகளில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படு வதற்கு முன்னர் கால்நடை களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய மான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.