» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிறது மாஞ்சோலை: மத்தியக் குழுவினர் ஆய்வு!

புதன் 25, ஜூன் 2025 4:21:37 PM (IST)

களக்காடு- முண்டந்துறை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். 

நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு 969 ச.கி.மீ பரப்பளவுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. 

இந்த வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. இங்கு ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் தேயிலை தோட்டங்கள் 99 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த தேயிலை தோட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், மாஞ்சோலை வனப்பகுதியின் குத்தகை வரும் 2028-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி அந்நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிலும் தொழிலாளர்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து களக்காடு- முண்டந்துறை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள மத்தியக்குழுவினர், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உயர்மட்டக் குழுவின் தலைவர் சித்தாந்த தாஸ் தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வனப்பகுதிகளின் தற்போதைய நிலை என்ன? இந்த பகுதியின் மொத்தப்பரப்பளவு, இதற்குரிய சாலை வசதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதனை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்டவுடன் யார், யாரை வனப்பகுதிக்குள் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்குழுவினர் மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர். அதன்பின்னர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி செயல்பாட்டிற்கு வரும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory