» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் அல்வாவில் தேள் கிடந்ததாக புகார்: உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை

வியாழன் 17, ஜூலை 2025 8:54:42 AM (IST)



நெல்லையில் கடையில் வாங்கிய அல்வாவில் தேள் கிடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அல்வா கடை தயாரிப்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழ அழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தன். இவர், கடந்த 13-ந் தேதி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் எதிரே உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் ¼ கிலோ அல்வா 4 பொட்டலம், ½ கிலோ அல்வா பொட்டலம் ஒன்று மற்றும் கார மிக்சர் ஆகியவற்றை வாங்கியதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வீட்டில் வைத்து அந்த ½ கிலோ அல்வா பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது, அதற்குள் தேள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, இந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அவர், சாந்தி ஸ்வீட்ஸ் நிர்வாகம் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. நெல்லை ஜங்சனுக்கு வருபர்கள் பலரும் அல்வா சாப்பிட விரும்புவார்கள் என்பதால் இந்த வீடியோ நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா தயாரிப்பு கூடத்தில்அதிரடியாக சோதனையிட்டனர்.

பல்வேறு பரிசோதனைகளை நடத்திய அவர், அல்வாவில் தேள் கிடந்தது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அந்த நோட்டீஸில், அல்வா தயாரிக்க பயன்படும் தாமிரபரணி தண்ணீரின் தரம் குறித்த சான்றிதழ், அல்வா தயாரிப்பு கூடத்தின் ஜன்னல்களில் தூசிகள் உள்ளே வராதவாறு கம்பி வலை அமைத்தல், தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் சுகாதாரச் சான்றிதழ், அல்வாவின் தரம் குறித்த ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெறுவதற்கான முயற்சி, தாமிரபரணி தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது மற்றும் அதன் தரம் குறித்த தனிச் சான்றிதழ் உள்ளிட்ட 15 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

வரலாறு உண்மையாம்Jul 17, 2025 - 09:48:53 AM | Posted IP 104.2*****

திருநெல்வேலி அல்வாவை முதலில் கொண்டுவந்தவர் தமிழகத்தில் பிழைக்க வந்த வட நாட்டு பீஹார் காரணாம் ? தமிழர் இல்லையாம், அப்படித்தானே .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory