» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது : சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

திங்கள் 21, ஜூலை 2025 8:33:49 AM (IST)



குற்றாலத்தில் மலர் கண்காட்சியுடன் சாரல் திருவிழா தொடங்கியது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டிய நிலையில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள அருவிகளில் குளிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஆண்டுதோறும் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சாரல் திருவிழா மலர் கண்காட்சியுடன் நேற்று மாலை தொடங்கியது. 

இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மலர் கண்காட்சியை பார்வையிட்டார். இந்த மலர் கண்காட்சியானது ஐந்தருவி தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவில் நடந்து வருகிறது. இதில் கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. கண்காட்சியில் தோட்டக்கலை துறை சார்பில் மலர்கள் மற்றும் செடி-கொடிகளால் அலங்கரிக்கப்பட யானை, ரெயில் பூச்சி, காய்கறிகளால் செய்யப்பட்ட குரங்கு உருவம், விதைகள், நறுமணப் பொருட்கள் மற்றும் தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சி போன்றவற்றை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் குடும்பத்தினருடன் பலர் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்றது.

இந்த விழாவையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். அவருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலை குமார், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் கலைஞர்களின் இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. இதனை திரளான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். சாரல் திருவிழா தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் நேற்று முன்தினம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று ஐந்தருவியில் நீர்வரத்து சீரானதால் அங்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் 2-வது நாளாக தடை நீடித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory