» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு!

புதன் 30, ஜூலை 2025 10:42:39 AM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிக் குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், சட்டமன்ற உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் (சேலம் மேற்கு), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்), கோ.தளபதி (மதுரை வடக்கு), அ.நல்லதம்பி (திருப்பத்தூர்), சா.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணாநகர்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும் மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), ரூபி.ஆர்.மனோகரன் (நாங்குநேரி) ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தெரிவித்ததாவது :சட்டமன்ற பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் அறிவிக்கும் திட்டங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் வினாக்கள் அதனடிப்படையில் அறிவிக்கப்படும் திட்டப்பணிகள் ஆகியவை உறுதிமொழியாக கருதப்படுகிறது. இந்த உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதிமொழி அளிக்கப்பட்டு இன்று ஆய்வுக்கு எடுக்கப்பட்ட உறுதிமொழிகளின் எண்ணிக்கை 137 ஆகும். இந்த ஆய்வில் 8 உறுதிமொழிகள் படித்து பதிவு செய்யப்பட்டவையாகும். மேலும், 43 உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் 86 உறுதிமொழிகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. நடப்பு சட்டமன்றப் பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்ட 51 உறுதிமொழிகளில் 13 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2 உறுதிமொழிகள் படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 36 உறுதிமொழிகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நிலுவையிலுள்ள உறுதிமொழிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இன்றையதினம் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, டவுண் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் கோவிலில் ரூ.4 கோடி மதிப்பில் கல்மண்டபம் புதுப்பிக்கும் பணிகள், தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, 425 கிலோ மதிப்பிலான வெள்ளித்தேர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், ரூ.5.83 கோடி மதிப்பில் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை மற்றும் தொற்றா நோய் பிரிவின் கட்டுமானப்பணிகளையும், 

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை முதற்கட்டமாக கொங்கந்தான்பாறை விளக்கு முதல் தருவை வரையுள்ள சாலை அமைக்கும் பணிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் 2 உயர்மட்ட பாலங்கள், 2 சிறு பாலங்கள், 44 பெட்டி பாலங்கள் மற்றும் 1 இரயில்வே மேம்பாலத்துடன் நடைபெற்று வருவது குறித்தும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் முதலமைச்சரின் அறிவிப்பு 2023-2024-ன் படி ரூ.9.38 கோடி மதிப்பில் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5.06 கோடி மதிப்பில் புதிய மரபணு ஆய்வக பிரிவு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், 

பாளையங்கோட்டை உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்ட சபையில் அறிவிக்கப்பட்டபடி ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் முதல் தளத்தில் நுண்ணுயிரியல் ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், உபகரணங்கள் மற்றும் மேம்பாட்டு பணிக்காக ரூ.4.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதையும், பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் ரூ.13.12 கோடி மதிப்பில் வெளிநோயாளி பிரிவினையும், ரூ.14.81 கோடி மதிப்பில் நிர்வாக பிரிவினையும், ரூ.7 கோடி மதிப்பில் விடுதி கட்டிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் மு.கருணாநிதி, சார்பு செயலாளர் த.பியூலஜா, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் மு.இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனி வருவாய் அலுவலர் (சிப்காட்) இரா.ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, இணை இயக்குநர் (மருத்துவம்) லதா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) லிங்குசாமி உட்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory