» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:52:50 AM (IST)



சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் சிவபெருமாள் ஆடி உத்திராடம் நன்னாளில், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாகவும், சரங்கரலிங்க சுவாமியாகவும் காட்சி கொடுத்தார்.

இந்த அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேகமும், அலங்காரமும், மதியம் 1 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் ஆடித்தபசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாலை 6.08 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் ஆடித்தபசு கொடுக்கும் பந்தலுக்கு வந்தடைந்தார். அதேபோல் 6.21 மணியளவில் தபசு மண்டபத்தில் இருந்து தங்க சப்பரத்தில் அம்பாள் காட்சி அளிக்கும் பந்தலுக்கு வந்தடைந்தார். இருவரும் வந்து சேர்ந்த உடன் சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி, சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றுதல், பட்டு சாத்துதல், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

6.47 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சியளித்தார். அப்போது விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, மிளகாய் ஆகியவற்றை சப்பரத்தில் வீசினர். பக்தர்கள் எழுப்பிய சங்கரா... நாராயணா என்ற கோஷம் விண்ணை பிளந்தது. நள்ளிரவு 12 மணியளவில் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சியளித்தார்.

ஆடித்தபசு விழாவில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் ஷாம் கிங்ஸ்டன், துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜூ, கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜேஷ், முதல்வர் பழனி செல்வம்,  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்பட்டிதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு சங்கர் ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில் சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு செங்குட்டு வேலவன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory