» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

திருவேங்கடம் அருகே மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்களை சாகடித்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, கானம், கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு மானாவாரி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த பயிர்களை காட்டுப்பன்றிகள், மயில் உள்ளிட்டவை நாசமாக்கி வருகிறது. அதை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கையின் போது அசம்பாவித சம்பவங்களும் நிகழ்கின்றது. அந்த வகையில் தற்போது 50-க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்த குருவிகுளத்தில் யூனியன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பகுதியில் தினமும் ஏராளமான மயில்கள் சுற்றி வருவது வழக்கம். இந்த அலுவலகம் பின்னால் உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
விளைவித்த பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் அதை பறவை இனங்களில் இருந்து பாதுகாப்பதற்காக அவர் நடவடிக்கை மேற்கொண்டார். அதாவது, பயிர்களை சுற்றி நிலத்தில் எலி மருந்து (விஷம்) தடவிய மக்காச்ேசாளங்களை தூவியதாக கூறப்படுகிறது.
நேற்று அந்த பகுதிக்கு ஏராளமான மயில்கள் வந்தன. நிலத்தில் தூவிய எலி மருந்து கலந்த பயிர்களை அவை தின்றன. இதையடுத்து சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மயில்கள் மயங்கி விழுந்து இறந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஒட்டுமொத்தமாக சுமார் 50 மயில்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மயில்களை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதே இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டி மயில்கள் புதைக்கப்பட்டன.
சட்ட விரோதமாக எலி மருந்து வைத்து 50 மயில்களை சாகடித்த ஜான்சனை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எலி மருந்து கலந்து தூவிய மக்காச் சோளப் பயிர்களையும் வனத்துறையினர் ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிப்.14ல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:21:45 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்.பி. கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:02:53 PM (IST)

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)


உண்மையான விவசாயிOct 27, 2025 - 08:15:52 AM | Posted IP 172.7*****