» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் : தூத்துக்குடியில் சபரீசன் வேண்டுகோள்

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:20:07 AM (IST)



வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வேட்பாளர் என்பதை மனதில் வைத்து உடன்பிறப்புகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சரின் மருமகன் சபரீசன் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். இதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் பார்வையாளர்களையும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த சபரீசன், தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: "கழகத் தலைமைக்கும், முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கட்சிப் பணிகளைச் செம்மையாகச் செய்ய வேண்டும். அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், கட்சியின் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று நாட்டிற்கே வழிகாட்டியது. அதேபோல், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 'தளபதி' தான் வேட்பாளர் என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும். உழைப்புக்கு அங்கீகாரம்: "கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் அமையும்" என அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, சரவணக்குமார், காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

JOSEPHFeb 13, 2026 - 01:33:05 PM | Posted IP 162.1*****

வரும் சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் எதாவது ஒரு தகுதியில் போட்டியிட்டு மாநிலத்தில் அடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் இடம் பிடிக்கும் திட்டத்தில் கனிமொழி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனிமொழி நகர்வு அடுத்து உதயநிதிக்கு போட்டியாக உருவெடுத்து விடுவார் என்கிற அச்சம் முதல் குடும்பத்திற்கு ஏற்பட உடனே கனிமொழியின் ஆட்டத்தை தடுத்து நிறுத்தும் வேளையில் இறங்கி இருக்கிறது முதல் குடும்பம். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தற்போது தென் மண்டலங்களுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவரும் தனியாக தொகுதி வாரியாக கூட்டங்கள் போட்டு நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வருகிறார். அதாவது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை தன்னுடைய ஆதரவாளர்களாக கனிமொழியின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமைத்துள்ளது சபரீசனின் தென் மண்டல சுற்று பயணம். இந்நிலையில் தன்னுடைய கோட்டைக்குள் சபரீசன் தலையிடுவது கனிமொழிக்கு மிக பெரிய அளவில் அதிருப்தியை ஒரு பக்கம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், கனிமொழி ஆதரவாளர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தப்பி தவறி கூட கொடுத்து விட கூடாது என்பதர்க்கவே சபரீசன் தென் மண்டலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில் கனிமொழி ஏரியாவில் புகுந்து சபரீசன் ஆய்வு செய்வது திமுகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழ்ச்செல்வன்Feb 12, 2026 - 05:57:33 PM | Posted IP 172.7*****

கனிமொழியை அப்புறப்படுத்தி விட்டு டெல்லியில் இனி சபரீசன்தான் எல்லாம்.... அதற்கான முன்னோட்டம்தான் இது.... அடுத்து தூத்துக்குடியில் சபரீசன் போட்டியிட்டாலும் இடலாம்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory