» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: வீடு வீடாகச் சென்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

திங்கள் 16, மார்ச் 2026 8:06:35 AM (IST)



விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் வீடு வீடாகச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி, கடந்த 10-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் அந்த மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தகவலறிந்த குளத்தூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாகக் கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்களும், கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்த உறவினர்கள், இன்று 5-வது நாளாகப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

இக்கொலை வழக்கை விரைந்து விசாரிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

வழக்கு தொடர்பாக மாணவியின் சக மாணவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட சந்தேகத்திற்குரிய 20-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்ட போதிலும், முக்கியக் குற்றவாளிகளைப் பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தென்மண்டல ஐ.ஜி. ஆலோசனை

ஆரம்பகட்டத்தில் புலனாய்வுப் பணிக்குக் கிராம மக்கள் முழுமையாக ஒத்துழைக்காததால் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், மதுரை தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி நேற்று குளத்தூர் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் வழக்கின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி தலைமையில் 10 தனிப்படை போலீசார் மாணவி வசித்த கிராமத்திற்கு நேரடியாகச் சென்றனர். அங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: "தற்போது கிராம மக்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அண்டை கிராமங்களிலும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்றனர்.


மக்கள் கருத்து

ஒருவன்Mar 16, 2026 - 09:50:03 AM | Posted IP 162.1*****

மோப்ப நாய் யையும் கொண்டுவந்து கூட்டிட்டு போங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory