» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாய், மகனைத் தாக்கி கொலை மிரட்டல்: கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:53:15 AM (IST)

ஆறுமுகனேரியில் நிலுவைச் சம்பளப் பணத்தைத் திருப்பித் தருமாறு கூறி தாய் மற்றும் மகனைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளரை ஆறுமுகனேரி காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி ராஜமணியபுரத்தைச் சேர்ந்த ஜெயநாதன் - மோகனா (43) தம்பதியின் மகன் பாலமுருகன், ஆறுமுகனேரி காணியாளர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமாகக் கேரளாவில் இயங்கி வரும் சிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

மாதம் ரூ. 25,000 சம்பளம் பேசப்பட்ட நிலையில், அங்கு வேலை கடினமாக இருந்ததால் பாலமுருகன் 40 நாட்கள் மட்டும் பணியாற்றிவிட்டு ரூ. 19,000 சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில், சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கருப்பசாமி, மோகனாவின் வீட்டிற்குச் சென்று, "பாலமுருகன் செய்த வேலைக்கு ரூ. 12,000 மட்டுமே தர முடியும்; மீதி ரூ. 7,000-ஐ திருப்பிக் கொடு" எனக் கூறித் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் தர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, கருப்பசாமி தனது தாய் இசக்கியம்மாளுடன் மீண்டும் மோகனாவின் வீட்டிற்குச் சென்று பாலமுருகனின் கைபேசியைப் பறித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, அங்கிருந்த அலுமினிய வாளியால் மோகனா மற்றும் பாலமுருகனைத் தாக்கி, இரவுக்குள் பணம் தரவில்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இத்தாக்குதலில் காயமடைந்த மோகனா மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மோகனா அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

பணம்Aug 11, 2026 - 08:06:56 AM | Posted IP 104.2*****

பத்தும் செய்யும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory