» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தி.மு.க தேர்தல் அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான திட்டங்கள்!!
புதன் 20, மார்ச் 2024 3:14:18 PM (IST)
தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரில் ஐந்தாவது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க கட்சியின் தலைமை, கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்டது.
அதன் அடிப்படையிலேயே தேர்தல் அறிக்கையைத் தயார் செய்திருந்தது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:
1. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து ஏற்படுத்தித் தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
2. தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
3. முத்துநகர் விரைவு ரயில் சேவை போல், சென்னை செல்ல மேலும் ஒரு இரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
4. தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரில் ஐந்தாவது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்கப்படும்.
5. நாசரேத் பகுதியில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை அமைந்திருந்த இடத்தில், பொதுமக்களும் சிறு, குறு வியாபாரிகளும் பயன்பெறும் வகையில் மாற்றுத்தொழிற்சாலை அமைத்து, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், இங்குள்ள வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடவும் ஆவன செய்யப்படும்.
6. நாசரேத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பிடாரனேரி கிராமத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதியில் புதிய தொழில் நிறுவனங்களை நிறுவி அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, வாழ்வாதாரம் காத்திட ஆவன செய்யப்படும்.
7. காயல்பட்டினம் மற்றும் மீளவிட்டான் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
8. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் பனைபொருள்களுக்கு மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்ய வழி வகை செய்யப்படும்.
9. டெல்லி-மும்பை இடையே செயல்படுத்தியுள்ள பிரத்தியேக விரைவு போக்குவரத்துத் தடத்தைப் (dedicated freight corridor) போன்று சென்னை - கோயம்புத்தூர் - தூத்துக்குடி ஆகிய நகரங்களை இணைத்து ஒரு விரைவு சரக்கு போக்குவரத்துத் தடம் புதிதாகச் செயல்படுத்தப்படும்.
10. திருநெல்வேலியைத் தலைமை இடமாகக் கொண்டு திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ரயில்வே கோட்டம் அமைக்க ஆவன செய்யப்படும்.
மக்கள் கருத்து
INFORMATIONMar 20, 2024 - 03:38:11 PM | Posted IP 162.1*****
POINT 1 , 2 & 7 ALREADY DONE BY CENTRAL GOVERNMENT
TRUTHMar 21, 2024 - 08:43:11 AM | Posted IP 162.1*****