» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 இடங்கள் ஒதுக்கீடு! தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்
புதன் 20, மார்ச் 2024 3:58:55 PM (IST)
பாரதிய ஜனதா கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் இன்று (மார்ச் 20) கையெழுத்தானது.
நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில், பாரதிய ஜனதா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 20) கையெழுத்தானது. இதில் அமமுகவுக்கு 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 2 தொகுதிகள் எவை என்பதை பாஜக தலைமைதான் அறிவிக்கும். எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளது. டெல்டா பகுதிகளில் போட்டியிடவே எங்களுக்கு விருப்பம். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவே எங்கள் கட்சியினர் விரும்புகின்றனர் எனக் குறிப்பிட்டார்.