» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

ஆட்சியைத் தக்கவைக்கத் தேவையான எண்ணிக்கை தோழமைக் கட்சிகளால் உறுதியாக இருந்தும், தவெக அரசு தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிற்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெளிநடப்பு குறித்து விளக்கம்:"தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ அல்லது தொடரவோ திமுக தடையாக இருக்காது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே, எங்கள் கட்சி உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்," எனக் குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், இதற்காகத் தங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த தோழமை இயக்க உறுப்பினர்களான பிரேமலதா விஜயகாந்த், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி மற்றும் நித்தியானந்தம் ஆகியோருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அவர்களின் அந்த நிலைப்பாட்டை மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியைத் தக்கவைக்கத் தேவையான எண்ணிக்கை தோழமைக் கட்சிகளால் உறுதியாக இருந்தும், தவெக அரசு தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

"பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்து, அவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்."

"தூய அரசியல் (Clean Politics) என்று சொல்லி வந்தவர்கள், இப்போது அழுக்கு அரசியலில் (Dirty Politics) இறங்கியுள்ளனர்."

"இது தூய சக்தியா? இல்லை அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா? என வாக்களித்த மக்களே வருத்தப்படும் நிலை உருவாகியுள்ளது," என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தவெக-வுக்கு ஆதரவு அளித்த அதிமுக அதிருப்தி உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் என்ன 'ரிட்டர்ன் கிஃப்ட்' கொடுக்கப்போகிறார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என எச்சரித்த மு.க. ஸ்டாலின், திமுக தொடர்ந்து கொள்கை உறுதியோடு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory