» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெகவின் போலி வேடத்தை மக்களே கலைத்து விடுவார்கள்: டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

செவ்வாய் 2, ஜூன் 2026 4:10:55 PM (IST)



கடந்த ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளை காரணங்களாக அடுக்கி, தனது ஆட்சியை நிறைவு செய்துவிடலாம் என நினைத்தால், தவெகவின் போலி 'தூய சக்தி' வேடத்தை மக்கள் தாங்களாகவே கலைத்துவிடுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சியில் நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், மக்களின் நலத்திட்டங்கள் குறித்தோ, கடந்த மூன்று வாரங்களாக அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தோ முதல்வர் விஜய் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில், சினிமா வசனங்களும், அடுக்குமொழிப் பேச்சுகளும் மட்டுமே வெளிவந்தன. இது பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

"அரசு நிர்வாகத்தைச் சீரமைக்க ஆறு மாத கால அவகாசம் தேவை எனக் கோரும் முதல்வர் விஜய்க்கு, கொலை-கொள்ளை, லஞ்சம் கேட்டு மிரட்டுதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் போன்ற சட்டம்-ஒழுங்கு அவசர பிரச்சினைகளுக்கு அந்தக் கால அவகாசம் பொருந்தாது என்பது தெரியாதா?"

"தவெகவுக்காகச் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் கூட இன்று நியூஸ் பார்க்கும் நிலையில் உள்ளார்கள் என்று கூறும் முதல்வர் விஜய், ஒவ்வொரு நாளும் சந்தி சிரித்து வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் அந்தச் செய்திகளில் வருவதைப் பார்ப்பதில்லையோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது."

தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், "மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம், சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், இப்போது முந்தைய அரசுகளின் கடன் சுமையைக் காரணம் காட்டி அரைகுறையாகத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். 

தமிழகத்தின் கடன் சுமை சுமார் பத்து லட்சம் கோடி ரூபாயாக இருப்பது தேர்தலுக்கு முன்பே தெரிந்திருந்தும், சுய விளம்பரத்திற்காக மட்டுமே அறிவித்த இந்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைப் பார்க்கும் போது, வரும் காலங்களில் இவர் எந்த லட்சணத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்," என்றார்.

தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய டிடிவி தினகரன், "மைனாரிட்டி ஆட்சி நடத்திவரும் முதல்வர் விஜய்யின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அல்லு சில்லுகளின் ஆதரவோடு தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு, அது போதாது எனத் தீர்ந்த சக்திகள் மற்றும் பலரின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேர அரசியலைக் கையாண்டு, அவர்களில் சிலரை ராஜினாமா செய்ய வைத்ததோடு, அவர்கள் அனைவரையும் சட்டச் சிக்கலில் நிறுத்தியிருப்பதை என்னவென்று சொல்ல? இது தூய சக்தி அரசியலா அல்லது குதிரை பேர அரசியலா? ஆகவே, நிர்வாகச் சீர்கேடுகளை மட்டுமே காரணங்களாக அடுக்க நினைத்தால், இவர்களின் போலி வேடத்தை மக்களே கலைத்துவிடுவார்கள்," என்று தனது கண்டன அறிக்கையில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory