» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு பொருநை ஆவணப்படம் தேர்வு!

செவ்வாய் 2, ஜூன் 2026 4:38:17 PM (IST)



தாமிரபரணி நதிக்கரையில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுப் பணி குறித்த 'பொருநை' ஆவணப்படம், துருக்கியில் நடைபெறும் புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தாமிரபரணி என்று அழைக்கப்படும் 'பொருநை' நதிக்கரையில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முழுமையாகப் பதிவு செய்து, ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள 'பொருநை' ஆவணப்படம், துருக்கியில் நடைபெறும் புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தனி இசைப் பாடல்கள் மூலம் பிரபலமாகி, தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக முத்திரை பதித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, கலைப்பணிகளுக்கு அப்பாற்பட்டுத் தமிழரின் தொன்ம வரலாற்றை ஆவணப்படுத்தும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவரது 'தமிழன்டா' இயக்கத்தின் முன்னெடுப்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 20,000 கிலோமீட்டர் பயணித்துப் பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'தமிழி' ஆவணப்பட இணையத் தொடர் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த உன்னத வரலாற்றுத் தொடர்ச்சியாக, தற்போது 'பொருநை' ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வாழ்வாதார உள்கட்டமைப்பாக விளங்கும் பொருநை நதிக்கரை நாகரிகத்தின் தொல்லியல் சான்றுகளை உலகறியச் செய்யும் நோக்கில், இப்படத்தைப் பிரதீப்குமார் மற்றும் இளங்கோ சம்பத்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இத்திரைப்படம், தற்போது துருக்கியில் நடைபெறும் 'ஃபோகா சர்வதேச தொல்லியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத் திரைப்பட விழாவிற்கு' (Foca International Archaeology & Cultural Heritage Film Festival) திரையிடப்பட அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இந்தத் திரையிடலில் 'பொருநை' ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. 

தொல்லியல் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் உலகளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படத் தேர்வாகியுள்ள 'முதல் தமிழ் ஆவணப்படம்' பொருநை என்பது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும், குறிப்பாகத் தாமிரபரணி நதிக்கரை மக்களுக்கும் கிடைத்துள்ள உன்னதப் பெருமையாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory