» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

MemuTrainfile.jpg

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்களை விரைவாகக் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' (MEMU) ரயிலை இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தோவாளையில் இயங்கி வரும் புகழ்பெற்ற பூ மார்க்கெட்டிற்கு தினமும் பல ஊர்களிலிருந்து டன் கணக்கில் பூக்கள் வந்து குவிகின்றன. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவுக்கும் பெருமளவில் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு இரவு நேர விற்பனை நேற்று இரவு 11 மணிக்குத் தொடங்கி விடிய விடிய விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ஒரே நாளில் சுமார் 1,000 டன் பூக்கள் விற்பனையாகின.

சாலை மார்க்கமாக கேரளாவுக்குப் பூக்களைக் கொண்டு செல்வதில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தாமதத்தைத் தவிர்க்க ரயில் சேவை அவசியமாகிறது. தோவாளையிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், திருச்சூர் வழியாக குருவாயூர் வரை சிறப்பு மேமு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் எனப் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த 'மலர் மேமு எக்ஸ்பிரஸ்' ரயில் செல்லும் வழியிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும். இதன் மூலம் வியாபாரிகள் தங்களுக்குரிய நிலையங்களிலேயே பூக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேமு ரயில்களில் கதவுகள் அதிக அகலமாக இருப்பதால், பூ மூட்டைகளை விரைவாக ஏற்றி இறக்குவது மிகவும் எளிதாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் ஓணம் பண்டிகை காலம் முழுமைக்கும் இச்சிறப்பு மேமு ரயிலைத் தினசரி சேவையாக இயக்க வேண்டும்.

இச்சேவை மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் அதிக லாபம் கிடைக்கும். தோவாளை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் (Platforms), சரக்கு வாகன நிறுத்தங்கள் மற்றும் பூக்களைக் கையாளும் பிரத்யேகத் தளங்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் பொதுச்செயலாளர் பி. எட்வர்ட் ஜெனி வலியுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory