» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா தனது எதிர்காலத்தை ஸ்டார்ட்-அப் புரட்சியில் காண்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

சனி 17, ஜனவரி 2026 8:41:49 AM (IST)



இந்தியா தனது எதிர்காலத்தை ‘ஸ்டார்ட்-அப்’ புரட்சியில் காண்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவை வேலை தேடுபவர்களின் நாடாக மாற்றுவதற்குப் பதிலாக வேலை உருவாக்குபவர்களின் நாடாக மாற்றும் நோக்கத்துடன், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் தேசிய திட்டமாக, ‘ஸ்டார்ட்-அப்’ இந்தியா திட்டம் பிரதமர் மோடியால் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சத்துக்கும் மேலான ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த திட்டம் இந்தியாவின் பொருளாதார மற்றும் புதுமை கட்டமைப்பின் மூலக்கல்லாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் 10 ஆண்டுகால நிறைவு விழா நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், இந்த முயற்சியின் வளர்ச்சியில்தான் திருப்தி அடைந்ததாக தெரிவித்தார். இந்திய இளைஞர்கள் உண்மையான பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமான அம்சம் என்றார். புதிய கனவுகளைக் காண தைரியம் காட்டிய இளம் கண்டுபிடிப்பாளர்களை பாராட்டினார்.

மேலும், "10 ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் புதுமைகளுக்கு மிகக்குறைந்த வாய்ப்புகளே இருந்தன, ஆனால் அந்த சூழ்நிலைகள் சவால் செய்யப்பட்டு ‘ஸ்டார்ட்-அப்’ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது, இளைஞர்களுக்கு ஒரு திறந்தவெளியை வழங்கியது. இன்று அதன் முடிவுகள் நாட்டின் முன்னால் உள்ளன.

வெறும் 10 ஆண்டுகளில், ‘ஸ்டார்ட்-அப்’ இந்தியா திட்டம் ஒரு புரட்சியாக மாறியுள்ளது. இன்று, இந்தியா உலகின் 3-வது பெரிய ‘ஸ்டார்ட்-அப்’ சுற்றுச்சூழல் அமைப்பாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் 500-க்கும் குறைவான ‘ஸ்டார்ட்-அப்’கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது” என்று அவர் கூறினார்.

"2014-ம் ஆண்டில் இந்தியாவில் 4 ‘யூனிகார்ன்’கள் மட்டுமே இருந்தன, இன்று கிட்டத்தட்ட 125 ‘யூனிகார்ன்’கள் உள்ளன. உலகம் இந்த வெற்றியை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருக்கிறது. 2025-ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 44 ஆயிரம் புதிய ‘ஸ்டார்ட்-அப்’கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

தற்போது 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து கூட, இளைஞர்கள் தங்கள் சொந்த ‘ஸ்டார்ட்-அப்’களைத் திறந்து, மிகவும் அழுத்தமான அடிமட்டப் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறார்கள். இன்று நாடு தனது எதிர்காலத்தை ‘ஸ்டார்ட்-அப்’ புரட்சியில் காண்கிறது” என்றும் கூறினார்.‘‘ஸ்டார்ட்அப் இந்தியா என்பது வெறும் ஒரு திட்டம் மட்டுமல்ல, பல்வேறு துறைகளை புதிய வாய்ப்புகளுடன் இணைக்கும் ஒரு வானவில் பார்வை என்றும் மோடி கூறினார்.

ஏ.ஐ. புரட்சியில் முன்னணி வகிக்கும் நாடுகள் அதிக நன்மைகளைப் பெறும் என்றும், இந்தியாவுக்கு இந்த பொறுப்பு அதன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  மேலும், அடுத்த மாதம் இந்தியா, ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை நடத்தும் என்றும் அவர் கூறினார்.இந்த விழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory