» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இளம் பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: விஷம் கொடுத்து தூக்கிலிட்டு கொன்ற தாய், தந்தை கைது!

செவ்வாய் 2, ஜூன் 2026 8:32:18 AM (IST)

நாங்குநேரி அருகே இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. குடும்பத் தகராறில் மகளுக்கு வாயில் விஷம் ஊற்றி, தூக்கில் தொங்கவிட்டு கொடூரமாகக் கொலை செய்த தாய் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள செண்பகராமநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த நொச்சிகுளம் தெற்குத் தெருவில் வசிப்பவர் சிவன் (வயது 60). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், சுமார் 200 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி வைரம்மாள் (57). இத்தம்பதியருக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களில் மூன்று மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது.

கடைசி மகள் அமுதாவிற்கு (21) இன்னும் திருமணமாகவில்லை. அவர் வழக்கமாகத் தந்தையுடன் சேர்ந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலையில், அமுதா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தங்களது மகள் திடீரெனத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகப் பெற்றோர் சிவன் - வைரம்மாள் ஆகியோர் அக்கம் பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதனர். இது தொடர்பாக உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன், ஆய்வாளர் சுகாதேவி, சார்பு ஆய்வாளர் ஷைலு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த அமுதாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, துப்பு துலக்கினர்.

காவல்துறையினரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அமுதாவிற்கும், அவருடைய அக்காள் கணவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர், அவ்வழக்கத்தைக் கைவிடுமாறு அமுதாவைக் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் கேட்க மறுத்ததாகத் தெரிகிறது.

நேற்று முன்தினம் காலையில் இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவன் - வைரம்மாள் தம்பதியர், தங்களது மகள் அமுதாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளனர். இதில் மயக்கமடைந்த அவரை, வீட்டில் கயிற்றால் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். இதனால் அமுதா துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமுதா உயிரிழந்ததும் சிவன் - வைரம்மாள் தம்பதியினர், தங்களது மகள் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டதாக அக்கம் பக்கத்தினரிடமும், உறவினர்களிடமும் தெரிவித்து நாடகமாடியுள்ளனர். எனினும், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தம்பதியினர் பெற்ற மகளையே கொடூரமாகக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி, சிவனைப் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், வைரம்மாளை நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர். நாங்குநேரி அருகே பெற்ற மகளையே பெற்றோரே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory