» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்

சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதிகளான ராமசாமி - பாக்கியம்மாள் இருவரும் நகைக் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

நான்காண்டு கால திமுக ஆட்சியில் வெளியில் மட்டுமல்ல வீட்டிற்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது. பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்யப்படுகின்றனர். மருத்துவர்கள் மீது மருத்துவமனை வளாகத்திலேயே கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

வளக் கொள்ளைகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்கள் நட்டநடு சாலையில் வைத்து வெட்டி சாய்க்கப்படுகின்றனர். உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையில் புகாரளித்தாலும் கொல்லப்படும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் வழக்கமாக உள்ளது. தனிப்பட்ட கொலை, முன்விரோத கொலை, குடும்பக் கொலை, குடிபோதை கொலை, எங்கோ ஓரிடத்தில் கொலை என்று படுகொலைகளை வகை பிரித்து பாகுபடுத்தி, சட்டம்-ஒழுங்கு சீரழிவை நியாயப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் கூறிய எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா?

குடும்பங்களாகக் குறிவைத்து கொலைகள் நடைபெறுகிறது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து பலமுறை கொலைகள் நடைபெறுகிறது. ஆனாலும் கொலைகளைத் தடுக்க முடியவில்லை, கொலையாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உண்மையில் செயல்படுகிறதா? தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? இவையும் திராவிட மாடலின் சாதனைகளில் வருகிறதா என்ற அடுக்கடுக்கான கேள்வி எழுகிறது.

ஆகவே, திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற கொடூர படுகொலைகள் தொடரா வண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory