» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கீழடி ஆய்வை அங்கீகரிக்க இன்னும் நிறைய சான்றுகள் தேவை - மத்திய அமைச்சர் பேட்டி!

புதன் 11, ஜூன் 2025 8:43:55 AM (IST)

கீழடி அகழாய்வு அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இதனை அங்கீகரிக்க இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். 

சென்னை கமலாலயத்தில் மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய பா.ஜனதா அரசின் 11 ஆண்டுகால சாதனை மலரை வெளியிட்டார். அதனை தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜனதா மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையில் ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சி காலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. 30 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் குறிப்பாக ஏழைகள் நலன் காக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் கீழடி அகழ்வாராய்ச்சியானது அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும்.

இது மக்களின் உணர்வுபூர்வமான விஷயம் என்பதால் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அதனை முழுமையாக ஆய்வு செய்யட்டும். அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கட்டும். அவர்களே முடிவு செய்யட்டும். இது அரசியல்வாதிகள் முடிவு செய்யும் விஷயம் அல்ல.

ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசார் பிரதமர் மோடியின் சாதனையை விமர்சனம் செய்யலாம். ஆனால் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் பல மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியை இழந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய தணிக்கை துறை அறிக்கையில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பது ஒரு அனுமானம் தான். இந்த விவகாரத்தை பொறுத்தவரை நிலங்கள் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர்களும், மாநில அரசுகளும் செய்து வருகின்றன. எனவே நிதி கூடுதலாக செலவிடப்பட்டு இருக்கலாம்.

இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். அதற்காக இதையும் தி.மு.க.வினரின் 2-ஜி ஊழல் வழக்கோடு ஒப்பிட வேண்டியது இல்லை. இது சில நடைமுறை குறைபாடுகள் தான். அதை ஆய்வு செய்து சீர்படுத்த முடியும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory