» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் புதிய விரிவான மினி பேருந்து திட்டம் துவக்கம்: அமைச்சர் பங்கேற்பு

திங்கள் 16, ஜூன் 2025 4:26:26 PM (IST)



குமரி மாவட்டத்தில் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் சார்பில் புதிய விரிவான மினி பேருந்து சேவையினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கங்காடியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (16.06.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், கலந்துகொண்டு, மினி பேருந்து வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

விழாவில் அவர்  பேசுகையில்-முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 1996ம் ஆண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை மூலமாக பேருந்து செல்ல முடியாத பகுதிகளுக்கும் புதிய பேருந்து வழித்தடம் அமைத்து, பொதுமக்களுக்கு பேருந்து வசதி வழங்க வேண்டுமென இத்திட்டத்தினை செயல்படுத்தினார்கள். அன்றைய காலகட்டத்தில் நான் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக இருந்தேன். அந்த காலகட்டத்தில் தான் மினி பேருந்து திட்டம் தமிழ்நாட்டிற்குட்பட்ட கடைக்கோடி கிராமங்களுக்கும் நம்முடைய முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நடைமுறைப்படுத்தினார்கள். இத்திட்டமானது நம்முடைய மாவட்டம் போன்ற பிற மாவட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 

ஏனென்றால் பல்வேறு கிராமங்கள் குறுகிய சாலைகளை கொண்டுள்ளன. இதுபோன்ற பகுதிகளில் மினி பேருந்துகள்தான் செல்ல முடியும். மேலும் இதில் உள்ள குறைபாடுகளை களையும் வகையிலும், கள ஆய்வு மேற்கொள்ளும் போது மினி பேருந்து வசதி கேட்டு பல்வேறு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பெற்ற நாளிலிருந்து அனைத்து தரப்பட்ட மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சீரிய திட்டமான மினி பேருந்து வசதிகளை ஊரகப்பகுதிகளில் அனைத்து தரப்பட்ட மக்களும் பயனடையும் வகையில் அதனை விரிவுப்படுத்தி, இன்றைய தினம் புதிய விரிவான மினிபஸ் என்ற முத்தான திட்டத்தினை கொடியசைத்து தமிழ்நாடு முழுவதும் துவங்கி வைத்துள்ளார்கள். 

மேலும் புதிய விரிவான மினிபேருந்து திட்டம் பொதுமக்களின் நலன் கருதி 100 குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் பொருளாளார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் சாராம்சங்கள் மொத்த வழித்தட நீளம் 25 கி.மீ. பேருந்து சேவை இல்லாத வழித்தடநீளம் (Unserved Sector) 16.25 கி.மீ. (65%). பேருந்து வசதி உள்ள இடத்தில் வழித்தட நீளம் (Served Sector) 8.75 கி.மீ. (35%). வழித்தடத்தின் முடிவுப்பகுதியிலிருந்து (Terminal Point) 1 கிமீ தூரத்தில் அரசு மருத்துவமனைகள், மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், இரயில் நிலையங்கள், உழவர் சந்தை வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ் பெற்ற வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியாக இருக்கும். அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஒரு இடத்திற்கு 4 நடைகள் இயக்கப்படும் பகுதியும், ஏற்கனவே மினிபேருந்திற்கு அனுமதிசீட்டு வழங்கி இயக்கப்படாமல் உள்ள பகுதியும் பேருந்து சேவை இல்லாத வழித்தடமாக (Unserved Sector) கருதப்படும்.

தற்போது மினிபேருந்து அனுமதிசீட்டு பெற்று இயக்கி வரும் அனுமதிதாரர்கள் தங்களது வழித்தடத்தில் குறிப்பிட்ட சிலபகுதிகளுக்கு தடநிடிப்பு செய்து இயக்க விரும்பினால் ஏற்கனவே இயங்கி வரும் அந்த வழித்தடத்தின் அனுமதி சீட்டினை சரண் செய்து புதிய விரிவான மினிபேருந்து திட்டத்திற்கு மாறுவதற்கு (Migration of route) தங்களது விண்ணப்பத்தினை அளித்திருந்தார்கள். இப்புதிய வழித்தடத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ. கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும். மினிபேருந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருக்கைகளை தவிர்த்து 25 ஆக இருக்க வேண்டும். 

வீல்பேஸ் 390 செ.மீக்கு மிகாமல் இருக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு புதிய சிற்றுந்து அனுமதி கோரி வட்டார போக்குவரத்து அலுவலகம் நாகர்கோவிலில் 86 விண்ணப்பங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டத்தில் 19 விண்ணப்பங்கள் என மொத்தம் 105 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் இதில் குலுக்கல் முறையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் நாகர்கோவிலில் 21 விண்ணப்பங்களுக்கும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டத்தில் 11 விண்ணப்பங்களுக்கும் என மொத்தம் 32 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிற்றுந்து புலம் பெயர்தல் அனுமதி தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகம் நாகர்கோவிலில் 35 விண்ணப்பங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டத்தில் 30 விண்ணப்பங்கள் என மொத்தம் 65 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சிற்றுந்து புலம் பெயர்தல் செயல்முறை ஆணை வட்டார போக்குவரத்து அலுவலகம் நாகர்கோவிலில் 28 விண்ணப்பங்களுக்கும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டத்தில் 30 விண்ணப்பங்களுக்கும் என மொத்தம் 58 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் பேருந்து செல்ல முடியாத இடங்களையும் கண்டறிந்து அங்கும் பேருந்துகள் செல்ல இன்றைய தினம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 90 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது தயார் நிலையில் உள்ள மினிபேருந்துகள் வட்டார போக்குவரத்து அலுவலகம் நாகர்கோவிலில் 33 மின பேருந்துகளும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டத்தில் 21 பேருந்துகளும், என மொத்தம் 54 மினி பேருந்து வசதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவங்கிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 மினி பேருந்துகள் இயக்கத்திற்கான பேருந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பேருந்துகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இம்மினி பேருந்துகளால் பல நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான சின்ன சின்ன கிராமங்களை இணைக்க கூடிய ஒரு அற்புதமான திட்டமாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயப்பாடுகளும் இல்லை. இத்தருணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சக்திவேல் (நாகர்கோவில்), சுரேஷ் (மார்த்தாண்டம்), நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பினர் ஜோனா கிறிஸ்டி, வழக்கறிஞர் அகஸ்தீசன், முன்னாள் ஊராட்சிஒன்றியக்குழு தலைவர் சரவணன், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பூதலிங்க பிள்ளை, துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory