» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிளஸ்-1 மாணவர் மீது தாக்குதல்: சக மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 8:22:19 AM (IST)

சாத்தான்குளம் அருகே, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் பிளஸ்-1 மாணவரைத் தாக்கியதாக 5 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். சம்பவத்தன்று, இப்பள்ளியில் பிளஸ்-1 பயின்று வரும் வாலத்தூரைச் சேர்ந்த 16 வயது மாணவருக்கும், அதே பள்ளியில் பயிலும் சில மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது திடீர் மோதலாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த 5 மாணவர்கள் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட மாணவரைச் சாதிய ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதுடன், அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துத் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆரம்பத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தட்டார்மடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் வீடியோ கால் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருமாவளவன் தரப்பிலிருந்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் வேலம்மாள் விசாரணை மேற்கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (PCR) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இது குறித்துச் சாத்தான்குளம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

திருடன்Feb 24, 2026 - 12:05:27 PM | Posted IP 104.2*****

அந்த 5 பேரும் திருடர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory