» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் : தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி!

சனி 10, மே 2025 10:15:03 AM (IST)



அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.  

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை இன்று, நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்களைதான் நாம் அழிக்கின்றோம். ஆனால் பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள மக்கள் மீது போர் தொடுத்து நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள். இந்தியாவை பொறுத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கின்றோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றோம்.

இந்தியாவில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து வரும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான போரை நமது அரசு தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் இந்திய அரசுக்கும், எல்லையோர மக்களுக்கும் துணை நிற்க வேண்டும்.

2016-ம் ஆண்டு பஞ்சாப் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தினார்கள். அதனைப் பார்வையிட பாகிஸ்தான் ராணுவத்தினரை அழைத்து வந்தோம். திரும்பிச் சென்றவர்கள் நமது நாட்டை அவமானப்படுத்தினர். அதே ஆண்டு, உரி பகுதியில் ராணுவ முகாமில் 23 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். 2019-ல் புல்வாமா தாக்குதலில் 46 பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

தற்போது 2025-ம் ஆண்டு பஹல்காமில் 25 இந்தியர்கள், ஒரு நேபாளி உட்பட 26 பேரை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். அதில் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர் என்று பார்த்து படுகொலை செய்துள்ளனர். ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வந்திருக்கிறது. நமது நாட்டு கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் ராணுவம் இல்லை. ராணுவ கட்டுப்பாட்டில் தான் அந்த அரசு இருக்கிறது. இந்த தாக்குதல் இன்று, நாளை முடிய போவது இல்லை. அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகின்றோம்.

நாம் ரஷியா-உக்ரைன் போல் எல்லையை பிடிப்பதற்காக போர் நடத்தவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக நடத்துகின்றோம். நாம் பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறோம். பாகிஸ்தான் நலிவடைந்த நிலையில் இருக்கிறது. 12-க்கு 1 என்ற அளவில் இருந்து வருகிறது. நாம் நினைத்தால் பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இல்லாமல் ஆக்க முடியும்.

பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எறிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போர் நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். போர் இன்று, நாளை முடியாது. இதற்கு மேல் நாம் போக தான் போகிறோம். இனி இந்தியாவில் ஒரு உயிர் எடுப்பதற்கு பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும்.

இந்திய அரசுக்கு, ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் பேரணி வரவேற்கத்தக்கது. இதுபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூரின், ராணுவத்திற்கும், இந்திய அரசுக்கும் ஆதரவான பேச்சு மிக மிக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. என்றார். 

மேலும், தமிழக அரசு 4 ஆண்டு சாதனை கொண்டாடுவது குறித்த கேள்விக்கு, "தமிழகத்தில் வேதனையான நான்காண்டுகள். தமிழகத்தின் பொருளாதாரத்தில் நாம் பின் நோக்கி செல்கிறோம். இன்றைய சூழ்நிலையில் அரசியல் பற்றி நாம் பேச வேண்டாம் அது வேறு மாதிரி ஆகிவிடும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory