» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பனிமய மாதா ஆலயத் திருவிழா முன்னேற்பாடுகள் : அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு!

சனி 18, ஜூலை 2026 8:44:12 AM (IST)

SnowChurchSrinath.jpg

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா வருகிற 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தொடர்பாக, அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார்.  ஆட்சியர் விஷூ மகாஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பனிமய மாதா கோவில் திருவிழா வரும் ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி நற்கருணை பவனியும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி நகர வீதிகளில் மாதா சப்பர பவனியும் நடைபெற உள்ளன. திருவிழாக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சுகாதாரப் பணிகள் குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தற்காலிக சுகாதார வளாகங்கள் அமைத்தல், கூடுதல் பணியாளர்களைக் கொண்டு துப்புரவு மற்றும் குளோரினேஷன் பணிகளை மேற்கொள்ளுதல், தெருவிளக்குகளைப் பராமரித்தல் மற்றும் சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல்.பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கத் தேவையான இடங்களில் தற்காலிகத் தொட்டிகளை அமைத்தல்.

புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து பனிமய மாதா தேவாலயம் வழியாகக் கூடுதல் உள்ளூர் பேருந்துகளை இயக்குதல். தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யப் பகுதிவாரியாக ஒயர்மேன்களை நியமித்துக் கண்காணித்தல்.

தேவையான மருந்துகள், உபகரணங்களுடன் கூடிய மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துதல். தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல்.

காவல் துறை சார்பில் திருவிழா நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள், கண்காணிப்புக் கோபுரங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் அமைத்துப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளைத் திட்டமிடவும், தற்காலிக வாகனக் காப்பகங்களை ஏற்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தூத்துக்குடி அருகே அமையவுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்த பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாகவும், அவை நிறைவடைந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 34 பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டைகளை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி கலெக்டர் பிரபு, பயிற்சி உதவி ஆட்சியர் பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், பேராலயப் பங்குத்தந்தை ஜான் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory