» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி 31, ஜூலை 2026 8:27:22 AM (IST)

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதை தொடர்ந்து, அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதனிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும், வழக்கை ரத்து செய்து இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதேபோல், அவருக்கு ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ். சுபாதேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாகச் சில விளக்கங்களைக் கேட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ். சுபாதேவி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory