» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் தமிழ்வார விழா: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:10:36 PM (IST)



பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி  தமிழ்வார விழா சிறப்பு நிகழ்ச்சியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்ந நாள் கொண்டாட்ட துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் இன்று (29.04.2025) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு, தமிழ் அறிஞர்கள், அரசுத்துறை அலுவலர்களிடையே பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 22.04.2025 அன்று சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இன்று (29.04.2025) முதல் மே 5ம் தேதி வரை தமிழ்வார விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தார்கள்.

அதனடிப்படையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று (29.04.2025) கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு வார கொண்டாட்ட நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் நோக்கம் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் சமூகநீதிகொள்கை, அவர் எழுதிய புரட்சிகர படைப்புகள், தமிழ் உணர்வு உள்ளிட்டவைகளை இன்றைய இளைய தலைமுறையினர், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதேயாகும்.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி அண்ணாருக்கு பெருமை சேர்ந்ததோடு, பாவேந்தர் அவர்களின் பெயரில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தினார்கள். டாக்டர் கலைஞர் அவர்களை பின்பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் பாவேந்தர் அவர்களின் பெருமையை மேலும் சிறப்பிக்கும் வகையில் ஒரு வார காலம் பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்த ஆணைப்பிறப்பித்துள்ளார்கள்.
அதனடிப்படையில் இன்றைய தினம் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கையெழுத்துப்போட்டி, 30.04.2025 அன்று படத்தை அடிப்படையாக கொண்டு கதை சொல்லும் போட்டி, 02.05.2025 அன்று குறிப்பு எழுதுதல் மற்றும் வரைவு எழுதுதல் போட்டி, அறிவியல் தமிழ் மற்றும் கணினித்தமிழ் குறித்த வினாடி வினா போட்டி, 03.05.2025 அன்று தமிழ் இலக்கியம், தமிழ் புதினம் தொடர்பாக கதை சொல்லும் போட்டி மற்றும் கவிதை வாசிப்பு போட்டி, 05.05.2025 அன்று தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் மற்றும் தமிழ்வார விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சிகள், ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறையினரும் கலந்துகொண்டு தமிழ்வாரவிழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, உதவி இயக்குநர் தமிழ்வளர்ச்சித்துறை (பொ) ரெசினாள்மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், இணை இயக்குநர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், தனித்துணை வட்டாட்சியர் மணிகண்டன், அரசு அலுவலர்கள், தமிழ் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory