» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் விருது பெற்ற காகிதப் பூக்கள் குறும்படம்!

வெள்ளி 8, டிசம்பர் 2023 10:10:37 AM (IST)



குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான குறும்பட போட்டியில், திருச்சியில் எடுக்கப்பட்ட 'காகித பூக்கள்' குறும்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் குறும்படங்கள் திரையிடப்பட்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான ராஜ்கபூர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியா, கனடா, ரஷ்யா, ஈரான், அமெரிக்கா, நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட 40 குறும்படங்கள் திரையிடப்பட்டன.

அதில், திருச்சியில் டைரக்டர் ஆர். பாஸ்கர் இயக்கிய காகிதப் பூக்கள் குறும்படம் சர்வதேச அளவில், 2ம் இடத்தையும் தேசிய அளவில் முதல் இடத்தையும் பெற்று, ராஜ்கபூர் விருதை வென்றுள்ளது.காகித பூக்கள் குறும்படத்தில் நடித்த ஆர்.ஏ.தாமஸ் படத்தில் பணியாற்றிய ஹப்சி சத்தியாராக்கினி அல்லி கொடி மற்றும் எழில் மணி தேவி கணேசன் ஆகியோர் விழாவில் பங்கேற்று, விருதை பெற்று கொண்டனர்

குறும்படங்களை தேர்வு செய்யும் குழுவில் அமெரிக்காவின் திரைப்பட இயக்குனரும் நடிகையுமான சோபியா, நைஜிரியா நாட்டை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஓலன்ரிவாஜூ,  தென் ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த ஆப்ரிஷ், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரும் இயக்குனருமான ஆசிஸ் ராய், திரைப்பட விமர்சகரும் இயக்குநருமான சோம்நாத் பால், எழுத்தாளரும் நடிகருமான சுமன் சக்ரவர்த்தி, நடிகை சினேகா, நடிகர்கள் மாணிக் நஜூம்பர் உள்ளிட்டோர் இடம் பெற்று, விருதுக்கான படங்களை தேர்வு செய்தனர்.

விழாவில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான அன்ஜன் போஸ், தேசிய விருது பெற்ற இயக்குனர் அபிஜித் பானர்ஜி, முன்னாள் கொல்கத்தா மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி. எஸ். கர்ணன், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜாய்தீப் முகர்ஜி, இசையமைப்பாளர் அஞ்சன் குண்டு  உள்ளிட்டோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

காகித பூக்கள் குறும்படத்தின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்து, நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு, திருச்சியில் நடைபெற்றது.

பாராட்டு விழாவில், வேர்கள் அறக்கட்டளை நிறுவனர் அலெக்ஸ் ராஜா என்ற அடைக்கல ராஜா, அன்னை ரெசிடென்சி மற்றும் சோலை ரெசார்ட் நிர்வாக இயக்குனர் அன்னை ஆண்டனி, திரைப்பட நடிகர் மொசக் குட்டி ராஜேந்திரன், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணை தலைவர் சிக்கல் சண்முக சுந்தரம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் ஒயிட் ரோஸ் பொது நல சங்கத்தின் தலைவர் பா. சங்கர் திருச்சி  சௌராஷ்டிர குளோபல் கனெக்ட் தலைவர் பி.ஜெ.ஹரிநாத், கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ரியல் எஸ்டேட் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விருது  திருச்சி மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். மேலும், பல நல்ல படைப்புகளை எடுக்க வேண்டும், என்ற  உத்வேகத்தையும், நம்பிக்கையையும் தருகிறது என்று காகிதப் பூக்கள் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பாராட்டு விழா ஏற்பாடுகளை தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆர். பாஸ்கர் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory