» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: 1.13 லட்சம் குழந்தைகளுக்குச் விநியோகம்!

திங்கள் 29, ஜூன் 2026 8:36:14 AM (IST)



தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1,176 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 1,176 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் தீவிரமாக நடைபெற்றது.

மையங்களுக்கு வர இயலாத குழந்தைகளுக்காக 12 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள், இலங்கை அகதிகள் முகாம்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

இப்பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 4,704 பணியாளர்கள் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரத்து 781 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுச் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுத்து இம்முகாமைத் தொடங்கி வைத்தார்.

நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 28 இடங்களில் நடந்த முகாம்களில் 1,960 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

உடையார்குளம் ஆரம்ப சுகாதார நிலையம்: நாசரேத் பேருந்து நிலையம், மணிநகர், குறிப்பன்குளம் உட்பட 16 இடங்களில் இம்முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் முன்னிலை வகித்தார். இதில் 1,160 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மூக்குப்பீறி ஆரம்ப சுகாதார நிலையம்: பிரகாசபுரம், கச்சனாவிளை, நாலுமாவடி உட்பட 12 இடங்களில் இம்முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் சோனியா தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். இதில் 800 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory