» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் நிதி முடக்கம் முடிவுக்கு வந்தது : மசோதாவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!

வியாழன் 13, நவம்பர் 2025 12:20:27 PM (IST)



அமெரிக்காவில் அரசாங்க நிதி மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன் மூலம் 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது. 

அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30-ல் முடிவடையும். அக்.1-ல் புதிய நிதியாண்டு தொடங்கும். இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா செப்.30-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்நிலையில், அக்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால் நிதி மசோதா தோல்வியடைந்தது. இதனால் அமெரிக்க அரசு எதிர்கொண்ட நிதி முடக்கம் 43 நாட்களாக நீடித்தது.

இந்த நிதி முடக்கத்தால் அமெரிக்காவில் ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, விமானக் கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட சில அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கியது. மற்ற துறைகளின் அரசு ஊழியர்கள் பணிபுரியவில்லை, அதுபோல அரசு ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. 

இந்தச் சூழலில் சில ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன், செனட் சபையில் நிதி மசோதா நேற்று நிறைவேறியது.  இந்த மசோதா ஜனவரி 30-ம் தேதி வரை அரசுக்கான நிதியுதவியை நீட்டிக்கும். இதனால் அரசின் அத்தனை துறைகளும் இனி செயல்பட ஆரம்பிக்கும். அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள், அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும்.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 222 வாக்குகளும், எதிராக 209 வாக்குகளும் பதிவானது. மசோதா நிறைவேறிய இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கையெழுத்திடும் விழா நடந்தது. மசோதாவில் கையெழுத்திடும் முன்பு பேசிய ட்ரம்ப், "இன்று நாங்கள் மிரட்டிப் பணம் பறிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்ற தெளிவான செய்தியை சொல்லியுள்ளோம். நான் அமெரிக்க மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இதை மறந்துவிடக் கூடாது. இடைக்காலத் தேர்தல்கள் வரும்போது ஜனநாயக கட்சியினர் ​​நம் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory