» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

வியாழன் 1, மே 2025 11:49:33 AM (IST)


தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா இன்று காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு,  காலை 7 மணிக்கு கொடிபட்டம் வீதி உலா நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள கொடிமரத்தில் கலச கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. 

பின்னர் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  கொடியேற்றம் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சண்முகம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 7ஆம் நாள் திருவிழாவில் மே 7ம் தேதி சாமி, அம்பாள் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வெள்ளை சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 8-ம் திருநாளான மே 8ம் தேதி அன்று பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் மகாகணபதி, முருகப்பெருமானும் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும், பின்னர் சுவாமி சங்கர ராமேஸ்வர பாகம் பெரிய அம்பாளுடன் பெரிய எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். தேரோட்டத்தில் மேள வாத்தியங்களுடன் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 

திருவிழா நாட்களில் தினமும் நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து

Om Namakshivayaமே 2, 2025 - 02:03:22 PM | Posted IP 104.2*****

Om Namakshivaya...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory