» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்: மே 3ம் தேதி தொடங்குகிறது

வெள்ளி 2, மே 2025 3:33:41 PM (IST)



தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் மே 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவர்களின் கோடை கால விடுமுறையை பயனுள்ள அறிவுப் பயணமாக மாற்றும் நோக்கத்தில், ‘ஏனென்று கேள்’ எனும் தலைப்பில் கோடை கால அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி முகாம் வருகின்ற மே 3ஆம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரை தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் பூங்கா (STEM PARK) வளாகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இதில், மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் முற்றிலும் இலவசமாக பங்கு பெறலாம். தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரை மாணவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் வகுப்புகளும் செய்முறைப் பயிற்சிகளும் நடைபெறும்.

மேலும், இம்முகாமில் முதற்கட்டமாக, கணக்கும் இனிக்கும், கைகளில் கண்ணாம் பூச்சி, அறிவியல் பரிசோதனைகள், ஒரிகமி, கற்பனையும் கைத்திறனும், பொம்மலாட்டம், பலூனில் பொம்மைகள், மந்திரமா தந்திரமா, அறிவியல் கோமாளி, அறிவியல் ஆனந்தம், கதை சொல்வோம் - கதை உருவாக்குவோம், விளையாட்டை கற்போம், நம்புவீர்களா? போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெறும்.

அதுமட்டுமல்லாமல், முகாம் நாட்களில் தினந்தோறும் மாலை 5.30 முதல் 6.30 மணி வரை சதுரங்கப் பயிற்சி  சிறந்த பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும். தொடர்ந்து, அறிவியல் பூங்காவில் இடம்பெற்றுள்ள அனைத்து அறிவியல் சாதனங்களின் பயன்கள் குறித்து அறிவியல் வல்லுனர்களால் விளக்கம் அளிக்கப்படும். எந்தவொரு செயல்பாடுகளிலும் மாணவர்கள் மத்தியில் "ஏன்?” என்ற கேள்வி எழுப்பும்  நோக்கில் ஒரு சூழலை உருவாக்கும் விதமாக இம்முகாம் அமையப்பெறவுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில் வாராந்திர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் பூங்காவில் உள்ள சிறு திரையரங்கில் திரைக்காட்சி முறையில் திரையிடப்பட்டு, திரைப்படத்தில் அறிவியல் சார்ந்த உள்ளடக்கங்களை விளக்கி உரையாற்றவுள்ளனர்.

எனவே, குழந்தைகளின் அறிவியல் திறனையும், ஆர்வத்தையும் ஊக்குவிக்கச் செய்வது, அவர்களது எதிர்கால அறிவியல் பயணத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்ற அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கோடை கால அறிவியல் பயிற்சி முகாமில் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளை பங்குபெற செய்து முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கோடை கால அறிவியல் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு 95976 13988 / 82207 50082 என்ற கைபேசி எண்களிலும் அல்லது அறிவியல் பூங்காவிற்கு (STEM Park) நேரில் சென்றும் முன்பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

செ. அன்ன லட்சுமிமே 2, 2025 - 10:18:14 PM | Posted IP 172.7*****

அறிவியல் பயிற்சி ஏன் என்று கேள் என்ற கருப்பொருளை மையப்படுத்தி நடக்க ஏற்பாடுகள் செய்த மாவட்ட நிர்வாகம் மற்றும் இதரப் பொறுப்பாளர்களுக்கு மிகவும் நன்றி. அதிக மாணவ மாணவியர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory